செய்திகள்

புதுவை அருகே இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-02-28 09:35 GMT   |   Update On 2017-02-28 09:35 GMT
புதுவை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு தட்டாஞ்சாவடி நவசக்தி நகரை சேர்ந்தவர் வினோத் (வயது24). இவர் வில்லியனுரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வில்லினூரை சேர்ந்த பிரியங்கா (24) என்ற பெண்ணை காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

பிரியங்கா அவ்வப்போது ஓட்டலுக்கு சென்று கணவருக்கு உதவியாக இருப்பது வழக்கம். அப்போது ஓட்டல் வேலைகளை பிரியங்காவே முழுவதையும் செய்து வந்தார். அவருக்கு வேலைப்பளு அதிகரித்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பிரியங்கா மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வினோத் ஓட்டலுக்கு நிர்வாகத்தை கவனிக்க வந்து விட்டார். மதியம் பிரியங்காவுக்கு வினோத் போன் செய்த போது போனை பிரியங்கா எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வினோத் தனது பெற்றோரிடம் பேசி பிரியங்கா குறித்து விசாரித்தார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் வீட்டில் அறையில் சென்று பார்த்த போது அங்கு மின்விசிறியில் பிரியங்கா சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர்.

பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிரியங்காவுக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Similar News