ராணிப்பேட்டையில் மயானக்கொள்ளை விழாவுக்கு வந்த மாணவன் பாலாற்றில் மூழ்கி பலி
வாலாஜா:
ராணிப்பேட்டை பாறை தெருவை சேர்ந்தவர் அப்துல்வகாப், ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா, தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் நாசர் (வயது 15) ராணிப்பேட்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை ராணிப்பேட்டை பாலாற்றில் நடைபெற்ற மயானக்கொள்ளை விழாவை காண நாசர் பாலாற்றுக்கு வந்தான்.
அங்கு நண்பர்கள் சிலரோடு பாலாற்றில் உள்ள நீரில் இறங்கி நாசர் விளையாடி உள்ளான். அப்போது திடீரென நீரில் ஆழமான பகுதியில் மூழ்கி மூச்சுத் திணறி நாசர் பரிதாபமாக இறந்தான்.
உடனடியாக நண்பர்கள் கூச்சல் போட்டு அலறினர். இதை பார்த்த பாலாற்றில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்த பொதுமக்களில் சிலர் பாலாற்று நீரில் மூழ்கிய நாசரின் உடலை மீட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.