செய்திகள்

ஜல்லிக்கட்டு விழா: நல்லமநாயக்கன்பட்டியில் சீறி பாய்ந்த காளைகள்

Published On 2017-02-25 11:10 GMT   |   Update On 2017-02-25 11:10 GMT
திண்டுக்கல் அருகில் உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து கிராமம் நல்லமநாயக்கன்பட்டியில் புனிதவனத்து அந்தோணியார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 350 வீரர்கள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கு வேஷ்டி மற்றும் சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டது.

மாடுகள் முட்டி தள்ளியதில் தோட்டனூத்து மணிகண்டன், ரெண்டலப் பாறை டோமினிக், பெருமாள் கோவில்பட்டி, செல்வ கணேஷ், கோணப்பட்டி சங்கர், நொச்சிஓடைப்பட்டி மணி, ஆர்.எம்.டி.சி. காலனி ரஞ்சித்குமார், முத்தழகுபட்டி அகஸ்டின் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவையொட்டி போலீஸ் டி.எஸ்.பி. கோபால் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை ஊர்பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் நாளை பகல் தேர்பவனி நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் நல்லமநாயக்கன் பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதேபோல பட்டிவீரன் பட்டி அருகில் உள்ள அய்யம் பாளையத்திலும் இன்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது.

நாளை 26-ந் தேதி திண்டுக்கல் அருகில் உள்ள தவசிமடையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக வீரரகள் மற்றும் காளைகள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

Similar News