செய்திகள்

பேராவூரணியில் மாமியாரை கொலை செய்த மருமகன் கைது

Published On 2017-02-24 17:58 GMT   |   Update On 2017-02-24 17:58 GMT
பேராவூரணியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமியாரை மருமகன் தாக்கியதில் இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மருமகனை கைது செய்தனர்.
பேராவூரணி:

பேராவூரணி பொன்காடு பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது41) கொத்தனார். இவரது மனைவி அருள்ராணி  (39). இவர்களுக்கு ஜெனிபர்(21), விண்ணரசி (19) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

மரியதாஸ் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து விட்டு  மரியதாஸ் தூங்கி விட்டாராம்.

நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி கோபித்து கொண்டு வீட்டைவிட்டு போனது தெரிய வந்துள்ளது.  அதே பகுதியில்  உள்ள மாமியார் செல்வமேரி வீட்டிற்கு மனைவியை தேடி சென்றுள்ளார். அங்கு தனது மனைவி இல்லாததால் மாமியாருடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மரியதாஸ் அருகில் கிடந்த மண்வெட்டியால் மாமியார் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பலத்த காயமடைந்த செல்வமேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதுகுறித்து செல்வமேரியின் சகோதரி மகள் அன்னை தெரசா அளித்த புகாரின் பேரில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் வழக்குப்பதிவு செய்து கொலையாளி மரியதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News