செய்திகள்

ஓட்டேரியில் இன்று காலை தொழிலாளி வெட்டிக்கொலை

Published On 2017-02-24 09:44 GMT   |   Update On 2017-02-24 09:44 GMT
ஓட்டேரியில் இன்று காலை பீரோ தொழிலாளியை இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

ஓட்டேரி ஹைதர்கார்டன் 4-வது தெருவை சேர்ந்தவர் வினோத் (35). இவர் பீரோ கம்பெனியில் தொழிலாளி ஆக இருந்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் அதே பகுதியை சேர்ந்த முத்துவேல் (32) என்பவரை சந்தித்தார்.

இவர் தள்ளுவண்டியில் வைத்து இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது வினோத்தை வியாபாரி முத்துவேல் இளநீர் வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

அப்போது உயிர்தப்ப வினோத் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருந்தாலும் விடாமல் துரத்தி சென்ற முத்துவேல் அவரது கழுத்து, வயிறு பகுதிகளில் வெட்டினார். இதனால் ரத்தவெள்ளத்தில் சரிந்த வினோத் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

உடனே அங்கிருந்து முத்துவேல் தப்பி ஓடிவிட்டார். இது குறித்துஓட்டேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக்பாபு கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

அப்போது கொலை செய்யப்பட்ட வினோத்துக்கும், முத்துவேலுக்கும்இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதற்கு முன்பு இளநீர் விற்றுக்கொண்டிருந்த முத்துவேலை வினோத் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.

இந்த நிலையில் இன்று வழியில் மாட்டிக்கொண்ட வினோத்தை வழிமறித்த முத்துவேல் வம்புக்கு இழுத்து தகராறு செய்துள்ளார். அதை தொடர்ந்து இக்கொலை நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட வினோத்துக்கு துர்கா (30) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இக்கொலை குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருக்கும் முத்துவேலை தேடி வருகின்றனர்.

Similar News