செய்திகள்

ஒடுகத்தூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி தீக்குளிப்பு: கணவர் பலி-மனைவிக்கு சிகிச்சை

Published On 2017-02-20 11:39 GMT   |   Update On 2017-02-20 11:39 GMT
ஒடுகத்தூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி தீக்குளித்தனர். கணவர் இறந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அருகே உள்ள ஆசனாம்பட்டு அடுத்த குறவர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 36). அலுமினிய பாத்திரம் விற்கும் வியாபாரி.

இவரது மனைவி கோபிகா (30). இவர்களது மகன் கவுதம் (8), மகள் சுவாதி (6). பூபாலனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக அடிக்கடி கணவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 8-ந் தேதி இரவும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கவுதமும், சுவாதியும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்

வீட்டில் இருந்த கோபிகா மனம் உடைந்த நிலையில் இருந்தார். அங்கிருந்து மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த பூபாலன் அதிர்ச்சி அடைந்தார்.

மனைவி தீக்குளித்ததால் விரக்தி அடைந்த அவரும் மனைவியை கட்டிப் பிடித்தார். இதில் அவர் மீதும் தீப் பிடித்தது. இருவரும் உடலில் தீப்பிடித்த நிலையில் அலறிக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் துரிதமாக செயல்பட்டு 2 பேரின் மீதும் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் 2 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக பூபாலன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பூபாலன் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

கோபிகாவுக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News