செய்திகள்

வந்தவாசி அருகே ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

Published On 2017-01-28 14:55 GMT   |   Update On 2017-01-28 14:55 GMT
வந்தவாசி அருகே அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.இது குறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை, சென்னை வேளச்சேரியை சேர்ந்த டிரைவர் ஜெயபால் (வயது 55) என்பவர் ஓட்டினார். செய்யாறு பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் கண்டக்டராக இருந்தார். தென்கரை கிராமத்திற்கும், வல்லம் கிராமத்திற்கும் இடையே பஸ் சென்றபோது திடீரென்று ஆக்சில் உடைந்ததால் நிலை தடுமாறிய பஸ் சுகநதி ஆற்று பாலத்தின் மீது மோதி, ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லை.

இந்த விபத்தில் சேத்துப்பட்டை சேர்ந்த மகாலட்சுமி, கீழ்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரி, ராணி, கோட்டை அகரத்தை சேர்ந்தவர்கள் பரிமளா, பெருமாள், இவரது மனைவி லட்சுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News