செய்திகள்

கிருஷ்ணா கால்வாயில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2017-01-27 07:04 GMT   |   Update On 2017-01-27 07:04 GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று கடந்த 9-ந்தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் 19ந்தேதி தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. 21ந்தேதி பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. முதலில் வினாடிக்கு வெறும் 5 கனஅடி வீதம் தண்ணீர் மட்டும் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. தற்போது வினாடிக்கு 303 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 23.37 அடி தண்ணீர் மட்டம் பதிவானது.

626 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு 23 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Similar News