செய்திகள்
இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திடீர் பேட்டி
மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
ஜல்லில்க்கடு ஆதரவாளர்களின் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களான ராஜசேகர், கார்த்திகேய சிவசேனாதிபதி, அம்பலத்தரசு, ஹிப்காப் ஆதி கலந்து கொண்டனர்.
அப்போது, மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அவர்கள் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 90 சதவீதம் வெற்றியை நோக்கி பயணித்து விட்டோம் என்று கருதுகிறோம். கவர்னர் உரைக்கு பின்னர் தமிழக அரசு சட்ட மசோதாவை இயற்றும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.
போராட்டத்தை இனியும் தொடர்வது சிரமம். அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுத்து சட்ட ரீதியான போராட்டத்திற்கு மார்ச் 31-ம் தேதி வரை போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு 2 மாத காலம் காத்திருக்க வேண்டும்.
ஜல்லிகட்டு பற்றி நிறைய பேசுகிறோம், யாரும் பார்த்ததில்லை. அதனால் தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வேலைகளை பார்க்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு தடை வர வாய்ப்பில்லை. மாணவர்கள், இளைஞர்கள் அச்சப்பட தேவையில்லை.
சென்னையில் இருந்து கன்னியாக்குமாரி வரை போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு யாரும் தலைவர்கள் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.