செய்திகள்
திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி
திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி கிராமம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ராமன் (65). இவரது மனைவி சகுந்தலை. குழந்தை இல்லை.
திருவையாறு-கல்லணை சாலையிலுள்ள வடுகக்குடி கிராமத்தில் பழனிச்சாமி என்பவரின் தென்னந்தோப்பில் குடிசை அமைத்து தங்கி கூலிவேலை செய்து வாழ்ந்து வந்தனர்.
நேற்று மதியம் மழைபெய்து கொண்டிருக்கும்போது தோப்பில் வேலை பார்த்துவிட்டு குடிசைக்கு ராமன் திரும்பினார். அப்போது மோட்டார் செட்டிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு ராமனின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
தகவலறிந்த மரூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.