ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
சேதராப்பட்டு:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, புதுவை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், தமிழ் தேசிய இயக்கத்தினர் நிர்வாகி இளமுருகு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள தனியார் எலக்ட்ரிகல் நிறுவன ஊழியர்கள் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதே பகுதியில் உள்ள ஜவகர் நகர் சுபாஷ் சந்திரபோஸ் குடியிருப்போர் நல சங்கத்தினர் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறுவர்-சிறுமிகள், முதியோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.