செய்திகள்

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1 கோடி மோசடி செய்து தப்பிய ஆசாமி மீண்டும் கைது

Published On 2017-01-13 08:54 GMT   |   Update On 2017-01-13 08:54 GMT
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1 கோடி மோசடி செய்து விட்டு ஜாமீனில் வந்து தப்பிய ஆசாமி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்:

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நளவிரும்பி (வயது 57). இவர் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2009-11 ஆண்டுகளில் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1 கோடி வரை மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நளவிரும்பி ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நளவிரும்பியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நளவிரும்பி சிவகங்கை மாவட்டத்தில் சிலரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த விருதுநகர் மாட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நளவிரும்பியை மீண்டும் கைது செய்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு பாலகிருஷ்ணன் நீதிமன்ற காவலில் நளவிரும்பியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Similar News