சோழவந்தான் அருகே மகளிர் சுயஉதவிக்குழு அதிகாரிக்கு அடி-உதை: 2 பேர் கைது
சோழவந்தான்:
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிக அலுவலராக பணி புரிந்து வருபவர் பாரதி (வயது38).
உள்ளாட்சி அளவிலான கூட்டமைப்பு கடனுதவி திட்டத்தின் மூலம் கடன் பெற்றவர் அய்யன்கோட்டை புதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மனைவி சங்கீதா.
இவர் கடன் தொகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தார். அந்த தொகையை வசூல் செய்வதற்காக பாரதி தனது உதவியாளர்கள் மணிகண்டன், ரவி ஆகியோர் சங்கீதா வீட்டிற்கு சென்றனர்.
அவர் வீட்டில் இல்லாததால் உறவினர் லட்சுமியிடம் பேசிக்கொண்டிருக்கையில் அந்த பகுதியில் மது அருந்திய நிலையிலிருந்த சமயநல்லூரை சேர்ந்த ராஜதுரை (34 ) , முருகன் (42 ) , சோழவந்தானை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரும் கடன் வசூல் செய்ய வந்த பாரதியை தாக்கி தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து பாரதி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வழக்குப்பதிவு செய்து ராஜதுரை மற்றும் முருகனை கைது செய்தார். தலைமறைவான மற்றொரு நபர் ராஜேசை வலைவீசி தேடி வருகின்றனர்.