விருதுநகர் பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாடர்ன் நகரில் வசிப்பவர் ராமையா. இவர் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் சூப்பிரண்டாக உள்ளார்.
இவரது மனைவி குருவம்மாள் (வயது 54). வீட்டில் தனியாக இருந்த போது கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி யாரோ வெட்டிக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் குருவம்மாளின் தூரத்து உறவினரான அல்லம்பட்டியை சேர்ந்த சரவணபாண்டி (28). என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் பரிந்துரை செய்தார்.
இதன்பேரில் அதற்கான உத்தரவை கலெக்டர் சிவஞானம் பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து சரவண பாண்டி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.