செய்திகள்

ராணுவ வாகனத்தில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

Published On 2016-12-06 11:02 GMT   |   Update On 2016-12-06 16:14 GMT
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் ராஜாஜி மண்டபத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி புறப்பட்டது.
சென்னை:

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின் உடல் அருகே சோகமாக நின்றிருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோருக்கு பிரதமர் ஆறுதல் கூறினார்.

மாலை 4 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு, ஜெயலலிதாவின் உடலை இந்திய ராணுவ முப்படை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். ராஜாஜி மண்டபத்தின் வாசலில் தயார்நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டது.

மாலை 4.25 மணியளவில் ராணுவ வாகனம் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் நோக்கி புறப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

ராணுவ வாகனத்துடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் மற்றும் தொண்டர்கள் சோகத்துடன் அணி வகுத்து நடந்துச் சென்றனர்.

Similar News