செய்திகள்

ஓசூர் அருகே பழமையான கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

Published On 2016-12-03 12:12 GMT   |   Update On 2016-12-03 12:12 GMT
ஓசூர் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோர்களின் கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், சிவா, காமராஜ், ஜெகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வரலாற்று கல்திட்டைகள், கல்வெட்டுகளை கண்டறிந்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே தாசனபுரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோர்களின் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது தாசனபுரத்தில் கிடைத்த கல்திட்டைகள் பெருங்கற்காலத்தை சேர்ந்ததாகும்.

இது குறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது:–

இந்த கல்திட்டைகள் அனைத்தும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 50-க்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கல் வட்டங்கள் ஒரு அடுக்கு முதல் 3 அடுக்கு வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மற்றொரு ஆதிச்சநல்லூர், கீழடி போல தொல்லியல் சிறப்பு வாய்ந்த பகுதியாகும்.

இங்கு அகழாய்வு செய்தால் புதிய வரலாற்று உண்மைகள் தெரிய வரும். இந்த பகுதியில் இருந்த கல்திட்டைகள் புதையலுக்காக தோண்டப்பட்டு நமது முன்னோர்களின் வரலாற்று சின்னங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இதை பாதுகாக்க தொல்லியல் துறையும், தமிழக அரசும் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News