கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்ககோரி வழக்கு: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், நீதிபதி என்.கிருபாகரன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் எத்திராஜ் என்பவர் ஆஜராகி, ‘நாட்டில் புழக்கத்தில் இருந்து ரூ.1000, ரூ.500 ஆகிய ரூபாய் தாள்களை கடந்த 8 ந் தேதி இரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.
இதையடுத்து, கையில் உள்ள பணத்தை மாற்ற நாடு முழுவதும் வக்கீல்கள் கடும் அவதிப்படுகின்றனர். வங்கிகளில் வரிசை கட்டி நின்று செல்லாது பணத்தை மாற்றுகின்றனர். புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது.
ஆனால், கிராமங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்காமல் உள்ளது. இதனால், கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத பணத்தை மாற்ற முடியாமல் பரிதவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட கோரி புதிய வழக்கை தொடர உள்ளேன். இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரிக்கவேண்டும்’ என்று கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி என்.கிருபாகரன், ‘நீங்கள் முதலில் வழக்கு மனுவை தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.