செய்திகள்

சேலத்தில் ஆசிரியை வீட்டு பூட்டை உடைத்து 24 பவுன் நகை திருட்டு

Published On 2016-11-02 08:56 GMT   |   Update On 2016-11-02 08:56 GMT
சேலத்தில் ஆசிரியை வீட்டு பூட்டை உடைத்து 24பவுன் நகையை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்:

சேலம் பேர்லேண்ட்ஸ் அருகில் உள்ளது சிவாய நகர். இங்குள்ள 2-வது தெருவில் வசித்து வருபவர் வெங்கடாசலம் (வயது 39). ரோடு காண்டிராக்டர் ஒருவரிடம் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி தீபா(வயது 35). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை 5மணி அளவில் வெங்கடாசலமும், அவரது மனைவியும் சேலத்தில் நடந்த உறவினர்கள் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் அவர்கள் இரவு 12.30மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோ திறந்து கிடந்தது. இந்த பீரோவில் வைத்து இருந்த 24பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் 16ஆயிரத்தை திருடர்கள் திருடி சென்று இருந்தனர்.

பின்னர் அவர்கள் இந்த திருட்டு குறித்து பேர்லேண்ட்ஸ் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்- இன்ஸ்பெக்டர் சகாயம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருட்டு நடந்த பகுதியில் தான் முன்னாள் எம்.பியும்,. முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருமான கே.வி.தங்கபாலு இல்லம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருட்டு நடந்த பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். ஆட்டோக்கள் அடிக்கடி வந்து செல்லும். பகுதி ஆகும். இந்த நிலையிலும் திருடர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர். இவர்களை கைது செய்து மேலும் திருட்டு ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Similar News