செய்திகள்

மேலடுக்கு சுழற்சி நீடிப்பு: தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Published On 2016-11-01 05:23 GMT   |   Update On 2016-11-01 08:40 GMT
மேல் அடுக்கு சுழற்சியால் தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 30-ந் தேதி தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தையொட்டி காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.

காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைபெய்யும், ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஏதாவது ஒரு பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி 5 செ.மீ, கமுதி 4, சிவகிரி-3, திருவரை, மருதூர் தலா -2, காட்டுமன்னார் கோவில் 1 செ.மீ மழைபெய்துள்ளது.

Similar News