செய்திகள்

கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை

Published On 2016-10-28 15:07 GMT   |   Update On 2016-10-28 15:07 GMT
இண்டூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

தர்மபுரி ஒன்றியம் கொட்டாய்மேடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். தொழிலாளி. இவருக்கும் இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் பகுதியை சேர்ந்த காயத்ரி (வயது 20) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடன் தொல்லை காரணமாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட இளம்பெண் நாகர்கூடலில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் காயத்ரி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து இண்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காயத்ரியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News