செய்திகள்

திருவண்ணாமலையில் நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2016-10-27 10:23 GMT   |   Update On 2016-10-27 10:23 GMT
திருவண்ணாமலையில் நிதி நிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை புதுவாணியங்குளத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் திருவண்ணாமலை பஸ்நிலையத்தில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி குமார் ஏலச்சீட்டு நடத்தினார். அதில் அக்கம் பக்கத்தினர் பல பேர் பணம் கட்டி உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி நெருங்க ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்கள் பணம் கேட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொடுக்க குமாரிடம் பணம் இல்லை. இதையடுத்து உறவினர்கள், தெரிந்த நபர்களிடம் குமார் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் யாரும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மேலும் ஏலச்சீட்டிற்கு பணம் கொடுக்க என்ன செய்வது என்று தனது நண்பர்களிடம் குமார் புலம்பி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை நிதிநிறுவனத்தில் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பக்கத்து கடைக்காரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News