செய்திகள்

ஆஸ்பத்திரியில் மருந்து பாட்டில்களை வீசி ரகளை செய்த வாலிபர் கைது

Published On 2016-10-24 11:53 GMT   |   Update On 2016-10-24 11:53 GMT
வில்லியனூரில் அரசு ஆஸ்பத்திரியில் மருந்து பாட்டில்களை வீசி ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே பூஞ்சோலைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது20). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று இவர் கீழே விழுந்ததில் இவருக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சைபெற அவர் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தார். அப்போது பல நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வரிசையில் காத்து நின்றனர்.

ஆனால் அங்கப்பன் தனக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் தகராறு செய்தார். அதற்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஏற்கனவே பல நோயாளிகள் காத்து நிற்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து விட்டு காயத்துக்கு மருந்து போடுவதாக தெரிவித்தனர். இதனை அங்கப்பன் ஏற்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் ஆத்திரம் அடைந்து அங்கிருந்த மருந்து பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டார். இதுபற்றி ஆஸ்பத்திரி ஊழியர்கள் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன், புனிதராஜ் ஆகியோர் விரைந்து வந்து அங்கப்பனை கைது செய்தனர்.

Similar News