செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2016-10-24 01:58 GMT   |   Update On 2016-10-24 01:58 GMT
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்-புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. மியான்மரை நோக்கி நகரும் இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்ற போதிலும், நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு 420 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

இதன் காரணமாக மழை வாய்ப்பு இல்லை என்றபோதிலும், நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News