செய்திகள்

கோவையில் வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி

Published On 2016-10-11 16:04 GMT   |   Update On 2016-10-11 16:04 GMT
கோவையில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை:

ஈரோடு மாவட்டம் அய்யாகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலைமணி (45). நேற்று பொன்னுசாமி தனது மனைவியுடன் மொபட்டில் நீலாம்பூர்- மதுக்கரை ரோட்டில் சென்றார். செட்டிபாளையம் அம்பேத்கார் நகர் அருகே வந்தபோது அந்த வழியே வந்த டாரஸ் வாகனம் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த கலைமணி சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று காரமடை குரும்பர் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி (76). இவர் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் குப்புசாமி மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை - அவினாசி சாலையில் உள்ள ஊத்துப்பாளையம் என்ற இடத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.

உடலை மீட்ட போலீசார் பிரே பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News