செய்திகள்

திருக்கனூர் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி மயங்கி விழுந்து சாவு: கிராம மக்கள் சோகம்

Published On 2016-10-06 11:05 GMT   |   Update On 2016-10-06 11:05 GMT
திருக்கனூர் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே தமிழக பகுதியான திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் கவுண்டர் (வயது 80). விவசாயி. இவரது மனைவி லட்சுமியம்மாள் (75). இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தர்மலிங்கம் தனது மனைவி லட்சுமியம்மாளிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அதே போல் கணவர் வயது முதிர்ச்சியினாலும், நோயுற்று இருந்ததாலும் அவருக்கு தேவையான பணிவிடைகளை லட்சுமியம்மாள் முகம் சுழிக்காமல் செய்து அவரை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த தர்மலிங்கம் திடீரென இறந்து போனார். அப்போது லட்சுமியம்மாள் வயலுக்கு சென்றிருந்தார். கணவன் இறந்ததை கேள்விப்பட்ட லட்சுமியம்மாள் வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு கணவரின் உடலை பார்த்து கதறினார். அப்போது லட்சுமியம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் லட்சுமியம்மாளின் உயிர் பிரிந்தது.

இன்று மாலை கணவன்- மனைவி இருவரது உடலும் ஒரே சவப்பாடையில் வைத்து இறுதி ஊர்வலமாக எடுத்து சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறந்த சம்பவம் திருமங்கலம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News