செய்திகள்

ஜெயலலிதா உடல் நிலை பற்றி வதந்தி பரப்பிய 50 பேரை கண்காணிக்கும் போலீசார்

Published On 2016-10-05 07:02 GMT   |   Update On 2016-10-05 07:02 GMT
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்திகளை இணையதளம் வாயிலாக பரப்பிய 50 பேரை போலீசார் கண்காணித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ந்தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.

புதுவையை சேர்ந்த தமிழச்சி என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவை போட்டதற்காக அவருக்கு எதிராக இணைய தளங்களில் கண்டனங்களும் குவிந்தன.

இது தொடர்பாக அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழச்சி மீது சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் போலீசாரும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது போன்று வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றிய வதந்தி அவ்வப்போது இணையதளங்கள் மூலமாக பரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

இதுபோன்ற வதந்திகளை இணையதளம் வாயிலாக பரப்புபவர்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை இதனை பரப்பி விடுவதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 30-க்கும் மேற்பட்டவர்கள் இ-மெயில் மூலமாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Similar News