மதுரையில் ஆசிரியை வீட்டில் 25 பவுன் கொள்ளை
மதுரை:
மதுரை கருப்பாயூரணி தாவியன் தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி ஏஞ்சல் அலெக்சாண்டர் (வயது60), ஓய்வு பெற்ற ஆசிரியை.
கணவன்-மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு கோவா சென்றனர். நேற்று அவர்கள் ஊர் திரும்பினர்.
வீட்டிற்கு வந்த ஜேம்ஸ் கதவை திறக்க சாவியை எடுத்தபோது கதவு திறந்தே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டிற்குள் மர்ம மனிதர்கள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஏஞ்சல் அலெக்சாண்டர் கொடுத்த புகாரில் 25 பவுன் நகைகள் கொள்ளைபோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.