செய்திகள்

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு: பிரான்சில் இருக்கும் தமிழச்சியை கைது செய்ய நடவடிக்கை

Published On 2016-10-03 06:52 GMT   |   Update On 2016-10-04 06:10 GMT
ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணைய தளங்கள் மூலமாக தவறான தகவல்கள் வெளியிட்ட பிரான்சில் இருக்கும் தமிழச்சியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணைய தளங்கள் மூலமாக தவறான தகவல்கள் வதந்திகளாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரான்சில் வசித்து வரும் புதுச்சேரியை சேர்ந்த தமிழச்சி என்ற பெண் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி தவறான தகவலை தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். தமிழகம் முழுவதும் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் “முதல்-அமைச்சர் பற்றி தவறான தகவலை பதிவிட்ட தமிழச்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரான்சில் இருக்கும் தமிழச்சி அந்நாட்டு குடியுரிமையை பெற்றிருக்கிறார். இதனால் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல்களும் இருக்கின்றன. இதை எல்லாம் தாண்டி தமிழச்சியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் மூலமாக தமிழச்சியிடம் விசாரணை நடத்துவதற்கு முதல் கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு நாடுகளும் மற்ற நாடுகளுடன் குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக சில ஒப்பந்தங்களை செய்திருக்கும். அதன் அடிப்படையில் இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே ஒப்பந்தம் இருந்தால் அதன்படி தமிழச்சியை ஒப்படைக்கும்படி இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்படும்.

இதனை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமிழச்சி மீதான குற்றச்சாட்டுகள் பற்றி அந்நாட்டு போலீசார் விசாரிப்பார்கள். அப்போது அந்நாட்டு சட்டத்தின்படியும், தமிழச்சி செய்தது குற்றமாக கருதப்பட்டால் மட்டுமே அவரை இந்தியா அழைத்து வருவதில் சட்ட சிக்கல்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழச்சியின் பேஸ்புக்கையும் முடக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம் போலீசிலும் அ.தி.மு.க. பிரமுகர் மோகன்தாஸ் என்பவர் தமிழச்சி மீது புகார் செய்திருந்தார்.

இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். மதுரை சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153, 405/1பி, 505/2 ஆகிய பிரிவின்கீழ் தமிழச்சி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News