செய்திகள்

உலக சுற்றுலா தினம்: சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி

Published On 2016-09-27 13:43 GMT   |   Update On 2016-09-27 13:44 GMT
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சென்னை:

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதுதொடர்பாக தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

சுற்றுலா என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும் பொருளாதார வளமைக்கு ஊக்கசக்தியாகவும் விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கு புத்துணர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் இன்பகரமான அனுபவங்களை சுற்றுலா அளிக்கின்றது,

தமிழகம் குளிர்ந்த மலைப்பகுதிகளையும், 1076 கி.மீ. நீளமான கடற்கரையையும், மலைக்க வைக்கும் கோபுரங்களையும், புகழ்வாய்ந்த வரலாற்று சின்னங்களையும் குளிர்ச்சியான பேரருவிகளையும், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயங்கள், தாவரவியல் பூங்காக்கள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

சுற்றுலா நேரடி வேலைவாய்ப்பினை உருவாக்குவதோடு, அதன் மறைமுக தாக்கமாக உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகை செய்கின்றது.

2016-ம் ஆண்டின் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27-ம் நாள் சுற்றுலாத்துறை சார்பாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு உலக சுற்றுலா தின விழா கருப்பொருளாக “அனைவருக்கும் சுற்றுலா – உலகளாவிய அணுகுமுறையை ஊக்குவித்தல்” என ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறையின் மூலம் சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரி மாணவ/ மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலையிலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை நடைபெற்றது.

சுற்றுலாவை வளர்க்கும் பொருட்டும், சுற்றுலா தலங்களை பேணி காக்கும் பொருட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ / மாணவிகளை கொண்டு கொண்டு பேரணி நடத்தப்பட்டது, இப்பேரணியை சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஹர் சஹாய் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார். உடன் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஷ்வரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் கவிதா ராமு, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News