செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2016-09-23 08:06 GMT   |   Update On 2016-09-23 08:06 GMT
இந்து முன்னணி நிர்வாகியை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் நேற்று இரவு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான துயரச் சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

சசிகுமார் இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப்பணி ஆற்றியவர். சுற்றியுள்ள மக்களுக்கு பல நன்மைகளை செய்தவர். அப்படிப்பட்டவரின் கொலை சம்பவம் மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க செயலாகும்.

சசிக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சசிக்குமாரை இழந்து கண்ணீர் வடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி இயக்கத்தின் நண்பர்களுக்கும் எனது சார்பாகவும், தமிழக பா.ஜ.க. சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Similar News