செய்திகள்

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கோவை பெண்ணிடம் ரூ.58 ஆயிரம் மோசடி

Published On 2016-09-07 11:44 GMT   |   Update On 2016-09-07 11:44 GMT
கோவையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ.58 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். தொழிலாளி. இவரது மனைவி பைரோஜா (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பைரோஜாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

போனில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். பின்னர் அவர் உங்களது வங்கி கணக்கு காலாவதி ஆக போகிறது. எனவே அதை புதுப்பிக்க வேண்டும் என்றால் ஏ.டி.எம். நம்பரை தெரிவியுங்கள் என்று கூறினார். இதை நம்பிய பைரோஜா, ஏ.டி.எம்.மின் ரகசிய நம்பரை தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காலை பைரோஜா வங்கிக்கு தனது கணக்கில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவரது கணக்கில் இருந்து ரூ.58 ஆயிரம் பணம் பல தவணைகளாக எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் அவர் கேட்ட போது, போனில் பேசிய மோசடி நபர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து பைரோஜா கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கமி‌ஷனர் அமல்ராஜை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பொதுவாக வங்கியில் இருந்து எந்த அதிகாரிகளும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். நம்பரை கேட்க மாட்டார்கள்.

இதுபோல் மோசடி பேர் வழிகளிடம் ஏ.டி.எம். நம்பரை தெரிவித்தால் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவார்கள். எனவே பொதுமக்கள் இந்த வி‌ஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News