செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

Published On 2016-09-07 03:37 GMT   |   Update On 2016-09-07 03:38 GMT
உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் 5-9-2016 அன்று இரவு சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காரும் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த, சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த பழனியம்மாள், ஷர்மி, ஜெயந்தி மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம், பரவக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் 6 நபர்கள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Similar News