எண்ணூரில் கடலில் மூழ்கிய மாணவரை மீட்ககோரி உறவினர்கள் மறியல்
திருவொற்றியூர்:
எண்ணூர், அன்னை சிவகாமி நகர் 12- வது தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மகன் தேவா (வயது 15) அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்
நேற்று மாலை தேவா, பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர் கோபியுடன் எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரையில் குளித்தார்.
அப்போது ராட்சத அலை கோபியை கடலுக்குள் இழுத்து சென்றது. அவரை மீட்க தேவா முயன்றார். இதில் தேவா கடலில் மூழ்கினார். கோபி அதிர்ஷ்டவசமாக நீந்தி கரை சேர்ந்தார் அருகில் இருந்தவர்கள் தேவாவை மீட்க முயன்றும் முடியவில்லை.
இது குறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடலில் மூழ்கிய மாணவர் தேவாவை மீட்க போலீசாரும், கடலோர காவல் படையினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் விரைவுச் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. எண்ணூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.