செய்திகள்

காவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்தில் 20 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு: முத்தரசன் பேட்டி

Published On 2016-08-08 09:57 GMT   |   Update On 2016-08-08 09:57 GMT
காவிரி நீர் பிரச்சினை காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களில் சுமார் 20 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்று முத்தரசன் கூறினார்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான நிலையை கடைபிடித்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் மூலம் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவிரி நீர் பிரச்சினை காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களில் சுமார் 20 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ரூ.1250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சம்பா சாகுபடி செய்வதும் கேள்விகுறியாக உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மத்திய அரசை நிர்பந்தம் செய்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாறு பிரச்சினையில் மத்திய அரசு மெத்தன போக்கை கடைபிடித்ததால் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி உள்ளது. இதனால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 4½ லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தடுப்பணையை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 17-ம் தேதி இந்தியா முழுவதும் ரெயில், சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. தமிழகத்திலும் இந்த போராட்டம் நடைபெறும்.

டிசம்பர் 2-ம் தேதி மத்திய அரசின் தொழிற்சங்கங்கள் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றன. இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்போம். வக்கீல்கள் போராட்டத்தை முடிவுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 11-ந் தேதி விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் தஞ்சையில் நடைபெறுகிறது. இதில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நல கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News