தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரவிழா
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவிற்கு தும்பல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் வரவேற்றார். ஆரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார்.
அவ்விழாவையொட்டி நடந்த தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கில், டாக்டர்கள் ராஜ் மோகன், மேகலா ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். அதனையடுத்து, விழாவில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கிடையே, தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரோக்கியமான கொழு கொழு குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் தும்பல் மருத்துவமனை செவிலியர்கள் சுசீலா,தீபிகா, உமா, கோமதி, கவிதா, கலா, அஞ்சலம், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி சுகாதார செவிலியர் ராணி நன்றி கூறினார்.