செய்திகள்

ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு

Published On 2016-06-14 09:54 GMT   |   Update On 2016-06-14 09:54 GMT
ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ரெயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை பயணிகளிடம் ரெயில்வேதுறை ஏற்படுத்தி வருகிறது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வரும் அதே சூழ்நிலையில் ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது.

பிளாட்பாரம், ரெயில்நிலையம் வளாகம் முழுவதும் குப்பைகள் இன்றி தூய்மையாக வைத்திருக்கவும், கண்ட இடத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும், உணவு பொருட்கள் கவர்களை உரிய இடத்தில் போடவும் அறிவுறுத்தப்படுகிறது. ரெயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் குப்பை போட பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரெயில் நிலையங்களில் குப்பைகள் போடும் வழக்கமும், எச்சில் துப்பும் செயலும் இன்னும் நீடித்து வருகிறது.

ரெயில் நிலைய வளாகத்திற்குள் குப்பைகள் போட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் முறை 2012 முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது அதனை 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ரெயில்வே துறைக்கு அறிவுறுத்தி உள்ளது. ரெயில் நிலைய பகுதியில் பயணிகள் யாரும் கண்ட இடத்தில் குப்பை வீசினாலோ, போட்டாலோ பயணியிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. பொது நலன் கருதி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்தது.

இதனை ரெயில்வே வாரியம் வசூலிக்க முறை செய்து இது குறித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ. 5000 அபராதம் வசூலிப்பது குறித்து ரெயில்வே அதிகாரியிடம் கேட்டதற்கு, இந்த திட்டம் பெரிய ரெயில் நிலையங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. சிறிய ரெயில் நிலையங்களில் நடை முறைப்படுத்துவது கடினம் என்றார்.

Similar News