சட்டசபையில் ஜெயலலிதா–ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தனர்
சென்னை:
சட்டசபையில் புதிய உறுப்பினராக பதவி ஏற்றுக் கொள்வதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 10.48 மணிக்கு வந்தார். அவர் சட்ட பேரவைக்குள் நுழைந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா 10.52 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ஜெயலலிதா தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு நேரே எதிர் வரிசையில் அமர்ந்திருந்த மு.க.ஸ்டாலின், தன் இருக்கையில் இருந்த படி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்தார்.
உடனே முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். ஜெயலலிதா–ஸ்டாலின் இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தியது சட்டசபையில் பார்வையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.