செய்திகள்
ஜி.எஸ்.டி வரியை குறைக்கும் முதல்வரே தமிழகத்திற்கு தேவை - நடிகை ரோகினி பேச்சு
தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி வரியை குறைக்கும் முதல்வரே இன்றைய நிலைக்கு தேவை என திண்டுக்கல் தொகுதியில் நடிகை ரோகினி பிரசாரம் செய்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகினி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் பெண் உரிமை என்பது கேள்விக்குறியாக உள்ளது. சுத்தமான காற்று வேண்டுமென்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடினார்கள். ஆனால் அதில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
8 வழிச்சாலை தேவையில்லை என்று தொடர்ந்து விவசாயிகளும் ,பெண்களும் போராடி வருகின்றனர். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை தராமல் தேவையில்லாத திட்டங்களை அவர்கள் லாபநோக்கில் தருவதற்காக அரசுகள் முயற்சிக்கின்றன. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எனவே புதிதாக அமையவுள்ள தி.மு.க அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு குற்றம் இழைத்தவர்கள் மீது தண்டனை பெற்றுத்தரும். தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி வரியை குறைக்கும் முதல்வரே இன்றைய நிலைக்கு தேவை. விலைவாசி உயர்வு தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் அதைப்பற்றி கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள் தற்போது மக்கள் பிரச்சினைகள் குறித்தும், இலவசங்கள் குறித்தும் பேசி வருகின்றனர்.
சி.ஏ.ஏ போராட்டத்திற்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காத தமிழக அரசு தற்போது அதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று கூறுகிறார். எனவே இதுபோன்ற செயல்படாத தமிழக அரசை மக்கள் அகற்றி தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை வெற்றிபெற வைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.