திருப்பத்தூர் அருகே சீமான் உருவப்படம் பொறித்த டீ சர்ட்டுகள் பறிமுதல்
திருப்பத்தூர்:
ஓசூரில் இருந்து திருப்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்ட டிசர்ட் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதிகளில் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கந்திலி எல்லைப்பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் வேகமாக வந்தது.
அதை தடுத்தி நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உருவம் பொறித்த நூற்றுக்கும் மேற்பட்ட டிசர்ட்டுகள், ஆயிரக்கணக்கில் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்கள் உரிய அனுமதியின்றி ஓசூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக காரில் வந்த ஓசூரைச் சேர்ந்த அருண் (32) என்பவரிடம் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.