செய்திகள்

சுங்கச்சாவடிகளில் பணபிரச்சினை: மத்திய அரசை கண்டித்து ஜி.கே.வாசன் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2016-12-03 07:46 GMT   |   Update On 2016-12-03 11:03 GMT
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வருகிற 12-ந் தேதி (திங்கள்) சேலம் ரெயில் நிலையம் முன்பு ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவுள்ளது.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு சென்று வரவும், மீன்பிடிக்கவும் அனைத்து உரிமைகளும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது கச்சத்தீவில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள தமிழர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சுமூகமான முறையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

7-ந்தேதி கச்சத்தீவில் நடைபெறும் விழாவில் தமிழர்களும் பங்கு பெற வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டியதை பரிசீலிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மிக முக்கியமான பிரச்சினையை மத்திய அரசு தீவிர கவனத்துடன் கையாள வேண்டும்.

ரூ.1000, 500 நோட்டுகள் ஒழிப்பில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டண வசூல் அமுலாகி இருக்கிறது. பல சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதங்களும் நடந்துள்ளன.

வாடகைதாரராக இருந்தாலும் சரி, சொந்தகாரராக இருந்தாலும் சரி, பஸ், லாரி போன்ற வாகனங்கள் கட்டணம் செலுத்த சரியான சில்லை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இன்னும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சரிவர விநியோகத்துக்கு வரவில்லை. இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவது பிரச்சினையைத்தான் ஏற்படுத்தும்.

எனவே வருகிற 31-ந் தேதி வரை சுங்கச்சாவடி கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும்.

பிரதமர் மோடியும் மத்திய மந்திரிகளும் டெல்லியில் ஏ.சி.அறையில் அமர்ந்து முடிவு செய்யக்கூடாது. பிரச்சினைகளை நேரில் சென்று பார்த்தால்தான் தெரியும்.

சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி (திங்கள்) சேலம் ரெயில் நிலையம் முன்பு எனது தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News