லைஃப்ஸ்டைல்
கணவன் மனைவி புரிதல்

ஆண்களின் மனசு: பெண்கள் புரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள்

Published On 2020-03-04 05:05 GMT   |   Update On 2020-03-04 05:05 GMT
ஆண்களின் நிஜமான குணம் என்னவென்று தெரிந்துகொண்டால் பெண்கள் புலம்பவேண்டியதே இருக்காது. பெண்கள் பொறுமையாக இருந்து புத்திசாலித்தனமாக நடந்துகொண்டால் ஆண்களை புரிந்துகொண்டு வெற்றிகரமாக தாம்பத்ய வாழ்க்கை நடத்த முடியும்.
- ‘கணவர் என்னிடம் எப்போதும் இறுக்கமான முகத்தோடு பேசுகிறார். கேட்பதற்கு ஆம்..இல்லை.. என்ற பதிலை மட்டும் பேசிவிட்டு அத்தோடு நிறுத்திக்கொள்கிறார். ஆனால் எங்கள் உறவுக்கார பெண்களிடம் எல்லாநேரமும் சிரித்து சிரித்து கலகலப்பாக பேசுகிறார்’.

- ‘வீட்டில் அவருக்காக நான் அழகாக உடை உடுத்தி அவர் ரசிக்கும் விதத்தில் எப்போதும் அம்சமாக காட்சி அளிக்கவேண்டும். அவரோ வீட்டில் மேல் சட்டை கூட போடாமல் ஏனோதானோவாக உட்கார்ந் திருப்பார். ஆனால் வெளியே செல்லும்போது மட்டும் மற்றவர்கள் கண்படும் அளவுக்கு கச்சிதமாக உடை அணிந்து செல்கிறார்.’

... இப்படி பலவிதமாக தங்கள் கணவரை பற்றி புலம்பும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஆண்களின் நிஜமான குணம் என்னவென்று தெரிந்துகொண்டால் பெண்கள் புலம்பவேண்டியதே இருக்காது. ஆண்களுக்கு என்று தனி சுபாவங்கள் சில உண்டு. அவர்கள் உள்ளே ஒருமாதிரியும் வெளியே இன்னொரு மாதிரியும் நடந்துகொள்வார்கள். ‘சரி இதெல்லாம் கூடாது’ என்று அவர்கள் நினைத்தாலும் அதை எல்லாம் ஒதுக்கிவைக்க அவர்களால் முடியாது. ‘ஏன் நீங்கள் திரும்பத்திரும்ப அவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?’ என்று கேட்டால், அதற்கு சரியான பதிலை சொல்லவும் அவர்களால் முடியாது. ஆண்கள் என்றால் அப்படித்தான்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.

ஆண்கள் படிப்பிலும், சம்பாத்தியத்திலும் உயர்ந்தவர்களாக இருந்தாலும், தாழ்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் கொஞ்சம் அதிகாரத்தை காட்டத்தான் செய்வார்கள். குடும்பத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தியே ஆகவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். ‘எனக்கு நானே எஜமான். வேறு யாராலும் என்னை கட்டுப்படுத்த முடியாது’ என்பதை குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு பலவிதங்களில் உணர்த்த முயற்சிப்பார்கள். அதனால்தான் மனைவி சொல்லும் நல்ல ஆலோசனைகளுக்குகூட முக்கியத்துவம் கொடுக்காமல் மனைவியை அலட்சியம் செய்வதுபோல் நடந்துகொள்வார்கள்.

‘நான் என்ன சொன்னாலும் என் கணவர் அதை கேட்பார். நான் சொல்வதை உடனே செய்து முடித்துவிடுவார்.’ என்று மனைவி தன்னைப்பற்றி வெளியே கூறினால், ‘அவள் தனது கட்டுப்பாட்டிற்குள் இல்லையோ!’ என்ற கவலை கணவருக்கு வந்துவிடும். அதுதான் ஆண்களின் மனோ பாவம். அப்படி மனைவி வெளியே பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் மனைவியை அலட்சியப்படுத்துவது போலவோ, அவள் சொல்வதை கவனத்தில் கொள்ளாதது போலவோ நடந்துகொள்வார்கள்.

இப்படிப்பட்ட ஆண்கள் ‘அவள் சொன்னவுடன் செய்தால் நமக்குரிய மரியாதை கிடைக்காது. கொஞ்சம் அப்படி.. இப்படி.. இழுத்தடித்து செய்தால்தான் நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைவாள்’ என்ற எண்ணத்தோடு இருப்பார்கள். அதனால் மனைவி கோபப்படாமல் ஒன்றிற்கு இரண்டு முறை சொன்னால் அதை செய்து முடித்துவிடுவார்கள். அதுவரை பொறுமையை இழக்காமல் ‘நான் எவ்வளவுதான் சொன்னாலும் நீங்கள் மனது வைத்தால்தான் இந்த காரியம் நடக்கும். எப்படியும் செய்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன். உங்களைப்பற்றி எனக்கு தெரியாதா என்ன!?’ என்பதுபோல் பேசிப்பேசி காரியத்தை சாதிக்கவேண்டும்.

அப்படி அணுகும்போது ‘மனைவி நம்மை நம்புகிறாள் அதை செய்துகொடுத்துவிட வேண்டியது தான்’ என்று செயலில் இறங்க ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் பெரும்பாலான ஆண் களின் மனோநிலை. இன்னொரு முக்கியமான விஷயம். மனைவி சொல்வதை கணவர் கேட்டுதான் ஆகவேண்டும். ஏனென்றால் ஆண்களால் பெண் துணையின்றி தனியாக இயங்க முடியாது. பெண் துணையின்றி தங்களால் தனியாக இயங்க முடியும் என்று கருதி சிலர் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைநிலை இயல்பாகவும், சுமுகமாகவும் இருக்காது. அவர்கள் வெளியே இயல்பாக காட்டிக்கொண்டாலும் உள்ளே மனப்புழுக்கத்தோடுதான் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பார்கள்.



மனைவியை அலட்சியப்படுத்திவிட்டு அவர்களே தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் தனிமை ஆண்களை வெகுவாக பாதிக்கும். தனிமை அவர்களது ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மனைவியோடு இணக்கமாக வாழும் ஆண்களின் ஹார்மோன் அளவை பரிசோதித்தால் அது சீராக இயங்கிக்கொண்டிருப்பதை உணர முடியும். அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அவர்களது ஆயுளும் அதிகரிக்கும். இந்த உண்மையை ஆண்கள் உணர்ந்துகொண்டு, மனைவியோடு இணக்கமாக வாழ முன்வரவேண்டும். பெண்களும் தங்கள் கணவரின் மன-உடல் ஆரோக்கியத்திற்காக அவர்களோடு இணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

சில ஆண்கள் ‘உன்னை நான் திருமணம் செய்த நாளில் இருந்து என் நிம்மதி பறிபோய்விட்டது. உன்னோடு வாழ்வதைவிட எங்கேயாவது போய்விடலாம் போல் தெரிகிறது’ என்று அவ்வப்போது மனைவியிடம் குறைபடுவார்கள். அப்படிச்சொல்லும் கணவரிடம் அவர் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் ‘என்னை திருமணம் செய்த பின்பு உங்கள் நிம்மதி பறிபோய்விட்டதாக சொல்கிறீர்களே! திருமணத்திற்கு முன்பு நீங்கள் அனுபவித்த நிம்மதியான வாழ்க்கையைப்பற்றி சொல்லுங்கள்?’- என்று கேட்டுப்பாருங்கள். பதில்சொல்லத்தெரியாமல் பேந்த பேந்த முழிப்பார்கள். ஏன்என்றால் நிம்மதி என்பதற்கு என்ன அர்த்தம் என்பதே பெரும்பாலான ஆண்களுக்கு திருமணத்திற்கு முன்பு தெரிவதில்லை.

‘நான்தான் குடும்ப தலைவன். குடும்பத்தில் நான்தான் பெரிய ஆள்’- என்ற எண்ணம் மரபணுரீதியாகவே ஆண் களிடம் இருந்துகொண்டிருக்கிறது. அவர்களால் வீட்டிற்குள் மட்டும்தான் ‘தான் பெரிய ஆள்’ என்பதை காட்ட முடியும். ஆனால் குழந்தைகள் ‘போங்கப்பா உங்களுக்கு வேறு வேலையே இல்லை!’ என்றபடி திரும்பிப்பார்க்காமல் போய்கொண்டே இருக்கும். குழந்தைகள் அப்பாவின் ஆதிக்கத்தை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதனால் ‘நீயாவது எனது அதிகாரத்தை ஏற்றுக்கொள்’ என்ற மனோ பாவத்தில் மனைவியிடம் ‘தையதக்கா’ என்று குதிப்பார்கள். அப்போது மனைவிமார் கணவர்களை தங்கள் குழந்தைகள் போல் நினைத்து ‘ஏதோ அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு குதிக்கிறார். குதித்துவிட்டு போகட்டுமே! நாமாவது அவரது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டதுபோல் நடிப்போம்’ என்று நடித்து கணவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டி யதுதான். அவர் தன்னை மன்னராக உருவகப்படுத்த முயற்சிக்கும்போது நீங்கள் அதைவிட பலபடி உயரத்தில் அவரை தூக்கிவைத்து ‘நீங்கள் மன்னர் இல்லை சக்கரவர்த்தி..’ என்று கூறி, புகழாரம் சூட்டினால்போதும், நீங்கள் நினைத்த காரியத்தை எளிதாக சாதித்துவிடலாம்.

உங்களுக்கு ஈகோ பிடித்த கணவர் வாய்த்துவிட்டால் அவர் மீது கோபம் காட்டாமல் பரிதாபம் கொள்ளுங்கள். இந்த ஈகோகாரர்கள் அனைவரும் மனஅழுத்தம் கொண்டவர்கள். சாதாரணமாக ‘அப்படியா?’ என்று கூறிவிட்டு கடந்து போகவேண்டிய விஷயங்களைகூட பிடித்துவைத்து ஆராய்ச்சிசெய்து தங்கள் மனதை புண்ணாக்கிக்கொள்வார்கள். எந்த பிரச்சினையையும் மனம்விட்டு வெளியே சொல்லவும் மாட்டார்கள். மனைவி பரிதாபப்பட்டு பத்து தடவை கேட்டால்தான் ஒரு தடவை கொஞ்சமாக வெளியே சொல்வார்கள். இந்த பரிதாப ஜீவன்கள் எளிதாக இதயநோய் பாதிப்புக்கு உள்ளாகிவிடுவார்கள். மது பழக்கமும் வந்துவிடும். அதனால் ஈகோ கணவர்களை அவர்கள் நலன் கருதி குழந்தைபோல் நடத்துங்கள்.

ஆண்களில் பலரை பெண்கள் ‘இதயம் இல்லாத ஆள்’ என்றும், ‘குத்துக்கல்போன்ற ஆள்’ என்றும் நினைத்திருப்பார்கள். வெளிப்பார்வைக்கு மட்டும்தான் அவர்கள் அப்படி காட்சி அளிப்பார்கள். ஒரு பெரிய மாயத் திரையை போட்டு மறைத்து தங்களை ‘கல்’ போன்ற ஆளாக காட்டிக்கொண்டிருப்பார்கள். அந்த மாயத் திரையை விலக்கிவிட்டு அவர்களது இதயத்தை தொட்டுப்பார்த்தால் கருணைக்கடலாக காட்சி அளிப்பார்கள். அன்பு மூலம்தான் அவர்களது மாயத் திரையை பெண்களால் விலக்க முடியும். ஆனால் அவ்வளவு எளிதாக அந்த மாயத் திரையை விலக்க ஆண்களின் ஈகோ இடம் கொடுக்காது. அதனால்தான் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. பெண்கள் பொறுமையாக இருந்து புத்திசாலித்தனமாக நடந்துகொண்டால் ஆண்களை புரிந்துகொண்டு வெற்றிகரமாக தாம்பத்ய வாழ்க்கை நடத்த முடியும்.

ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கணவர் இறந்து போனால் பெரும்பாலான பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை. ஆனால் மனைவி இறந்து போனால் பெரும்பாலான ஆண்கள் மறு மணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு ஒரே ஒரு முக்கியக்காரணம் என்ன தெரியுமா? ஆண்களால் எப்போதுமே தனியாக வாழ்ந்து, நிறைவுபெற முடியாது. அவர்களுக்கு இளம் வயதில் அம்மா வேண்டும்! பின்பு அனைத்துக்கும் மனைவி வேண்டும்!!

அதனால் தானோ என்னவோ “தாய்க்குப் பின் தாரம்” என்று சொல்லி வைத்தார்கள். கணவரின் தாயின் ஸ்தானம் தனக்கு வேண்டும் என்று நினைக்கும் பெண் அவரது தாய் அவரிடம் காட்டிய பொறுமை, நிபந்தனைகளற்ற அன்பு ஆகியவற்றையும் காட்ட தயாராக இருந்தால் இல்லறம் என்றும் நல்லறம் தான்.

-விஜயலட்சுமி பந்தையன். 
Tags:    

Similar News