லைஃப்ஸ்டைல்

மனித மூளையின் ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்

Published On 2016-12-03 02:39 GMT   |   Update On 2016-12-03 02:39 GMT
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது.
கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில்தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தோம். மூளை ஒரு பெரிய ‘அக்ரூட்‘ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக்கும். இதற்குள் தான் இத்தனை சூட்சுமமும் இருக்கிறது.

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் சிறிய மணல் துகள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளையில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் வேறு உள்ளன. இவற்றுக்கு இடையேயான ஓய்வில்லாத மின் ரசாயன நடனம் தான் நம் சிந்தனை.

மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இன்றைக்கு இருக்கும் கம்ப்யூட்டரோடு மூளையை ஒப்பிட்டால், மூளை மிக மெதுவாக செயல்படும் ரகம்தான். ஆனால் இந்த மூளை அமைப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆணை விட பெண்ணின் மூளை அளவில் குறைவுதான். காரணம் பெண் இயற்கையாகவே ஆணைவிட குறைவான உடல் எடையை கொண்டு இருப்பவர்கள்.

மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை. அப்படியிருந்தால் எஸ்கிமோக்கள்தான் இன்று உலகிலேயே புத்திசாலிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் மூளை பெரியது. மிகவும் புத்திசாலித்தனமாக எழுதக்கூடிய அனடோல் பிரான்ஸ் என்ற எழுத்தாளருக்கு மிகவும் சிறிய மூளைதான் இருந்தது. அதே நேரத்தில் உலகிலேயே மிகப்பெரிய மூளை ஒரு முட்டாளுக்குத்தான் இருந்திருக்கிறது.

மனித மூளை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிறக்கும் போது இருக்கும் அளவை விட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது. இளமை முடிந்து தலை நரைக்கும் போது மூளையின் எடையும் குறையத் தொடங்குகிறது. வருடத்திற்கு ஒரு கிராம் என்ற அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை அதிக எடை கொண்ட மனித மூளை 2 கிலோ 49 கிராம் என்ற அளவில் இருந்தது. சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும்.

மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. ஆனால், இன்னமும் மூளையின் ரகசியம் நமது விஞ்ஞானிகளுக்கு முழுமையாக பிடிபடவில்லை என்பது தான் உண்மை.

Similar News