வழிபாடு

கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்தபோது எடுத்த படம்.

வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா

Published On 2022-08-10 04:56 GMT   |   Update On 2022-08-10 04:56 GMT
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
  • வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், அ. காளாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குல தெய்வமாக வழிபடும் வடக்கு வாசல் செல்வி அம்மனுக்கு ஆடி பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமான திடலில் கிராம பொதுமக்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு ஆங்காங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய பொங்கல் வைக்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

இந்த விழா மாலை வரை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் அ.காளாப்பூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News