வழிபாடு

ராஜகோபாலசாமி கோவில் ஆனி தெப்ப உற்சவம்

Published On 2022-07-14 05:06 GMT   |   Update On 2022-07-14 05:06 GMT
  • மங்கள வாத்தியங்கள் முழங்க, தெப்பதில் ராஜகோபாலசாமி பவனி வந்தார்.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் புகழ் பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடப்பது சிறப்பாகும். இந்த கோவிலில் ஆனி தெப்ப உற்சவம் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ராஜகோபாலசாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்கார வாகனங்களில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டு அரித்ரா நதி தெப்பக்குளத்தை சுற்றி வீதியுலா சென்றார். தொடர்ந்து இன்று இரவு அரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ருக்மணி, சத்தியபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, தெப்பதில் ராஜகோபாலசாமி பவனிவந்தார். இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்கம் சார்பில் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் அசோகன், பொருளாளர் பிரபாகரன், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன் மற்றும் அலுவலர்கள், தீட்சிதர்கள் செய்து இருந்தனர். தெப்ப உற்சவத்தில் மன்னார்குடி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News