வழிபாடு

பிளேக் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-07-06 03:09 GMT   |   Update On 2023-07-06 03:09 GMT
  • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
  • இன்று முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே 100 ஆண்டு பழமையான பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது.

கோவிலில் புதிதாக தட்சணா மூர்த்தி, வாராகி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று காலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாகபூஜை மற்றும் திரவ்ய யாகம் நடந்தது.

9 மணிக்கு மகா தீபாராதனைக்கு பின் கலச புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9.45 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் சங்கர நராயணன், ரவி ஆகியோர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'ஓம் சக்தி... பராசக்தி' என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

கோவிலை சுற்றிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பரிவாரம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் பிளேக் மாரியம்மனுக்கு மகாஅபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தச தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை தென்னம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

Tags:    

Similar News