வழிபாடு
கொடியேற்றம் நடந்ததையும், ஸ்ரீதேவி பூதேவியுடன் சாரங்கபாணி அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

சாரங்கபாணி கோவிலில் தைப்பொங்கல் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2022-01-07 08:10 GMT   |   Update On 2022-01-07 08:10 GMT
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தைப்பொங்கல் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ கோவில்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பொங்கல் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் சாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 14-ந்தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலின்படி தேரோட்ட வீதி உலாவிற்கு பதிலாக கோவில் பிரகாரத்தில் வெள்ளி ரதத்தில் சாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News