வழிபாடு
சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் கருட வாகனத்தில் வருவதை படத்தில் காணலாம்.

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-12-15 05:24 GMT   |   Update On 2021-12-15 05:24 GMT
வைகுண்ட ஏகாதசியையொட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் நேற்று முன்தினம் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெற்றது. சொர்க்க வாசலில் கட்டுவதற்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் திரவிய பொருட்களை பொதுமக்கள் கோவிலில் வழங்கினார்கள். இதை தொடர்ந்து இரவு பொதுமக்கள் வழங்கிய பொருட்கள் சொர்க்க வாசலில் கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு பெருமாளுக்கு சந்தனம், பன்னீர், நெய், பால் உள்பட 12 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. சொர்க்க வாசல் அதிகாலை 4.35 மணிக்கு திறக்கப்பட்டது.

முன்னதாக சொர்க்க வாசல் வழியாக கருட வாகனத்தில் வந்த பெருமாளை, ஆழ்வார்கள் பல்லக்கில் வந்து வரவேற்றனர். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பெருமாளும், ஆழ்வார்களும் வீற்றிருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தடுக்க பெருமாள் கோவில் வீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
Tags:    

Similar News