ஆன்மிகம்
பேரூர் அருகே ஐயப்பன் கோவிலில் 108 சங்கு அபிஷேக விழா
பேரூர் அருகே தீத்திபாளையம், பாலாஜி நகரில் ஐயப்பசுவாமி கோவிலில், 108 சங்கு அபிஷேக விழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
பேரூர் அருகே தீத்திபாளையம், பாலாஜி நகரில் ஐயப்பசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், 108 சங்கு அபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, தர்மசாஸ்தா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு, அர்ச்சகர் மு.ராஜேந்திரசிவம் தலைமையில் யாகவேள்வி வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், கன்னிமூல கணபதி, ஸ்ரீபாலமுருகன், ஐயப்பசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகம், 108 சங்கு தீர்த்த அபிஷேக விழா நடந்தன.
இதையடுத்து, ஐயப்பனுக்கு அலங்கார சிறப்பு வழிபாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் பெருமாள், செயலாளர் விஸ்வநாதன், துணைச்செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் கணேசன், பொருளாளர் தேவராஜ், துணைப்பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.