ஆன்மிகம்
வளசரவாக்கம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதை படத்தில் காணலாம்.

சென்னையில் சிறிய கோவில்கள் திறப்பு: பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2020-08-11 03:04 GMT   |   Update On 2020-08-11 03:04 GMT
மாநகராட்சி பகுதிகளில் சிறிய கோவில்களில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள சிறிய கோவில்கள் திறக்கப்பட்டன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பின்னர், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள கோவில்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருந்த போதிலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்வதற்கு தடை நீடித்து வந்தது.

இந்த நிலையில், சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான கோவில்களில் 10-ந் தேதி (நேற்று) முதல் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னையில் உள்ள சிறிய அளவிலான சிவன் கோவில்கள், பிள்ளையார் - முருகன் கோவில்கள், அம்மன் கோவில்கள் நேற்று திறக்கப்பட்டு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை கோடம்பாக்கம் பாலமுருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்தபடி சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் பயபக்தியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர். முருக பக்தையான லட்சுமி என்பவர் கூறும் போது, “நீண்ட நாளுக்கு பிறகு சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மனதுக்கு அமைதியை தருகிறது. அந்த முருகப்பெருமானே இந்த கொரோனா தொற்றில் இருந்து நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

சிறிய கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில், பெரிய கோவில்கள் திறக்க எப்போது அனுமதி அளிக்கப்படும்? என்று பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 
Tags:    

Similar News