ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2020-01-25 06:51 GMT   |   Update On 2020-01-25 06:51 GMT
திருக்கணித பஞ்சாங்கப்படி ஒருசில கோவில்களில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டது. இதனால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பத்கர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்திபெற்ற தர்பாராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வாக்கிய பஞ்சாங்கப்படி மட்டுமே சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி தான் கடந்த 2014, 2017-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஒருசில கோவில்களில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டது.

திருக்கணித பஞ்சாங்கம் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு பொருந்தாது. அதன்படி தற்போதைய சனிப்பெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான பூஜை தான் நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று வந்தனர். அவர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடிவிட்டு சனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

இது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் கூறுகையில், திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் 27.12.2020 அன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வரர் பெயர்ச்சி அடைகிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
Tags:    

Similar News